ஓளவையார் ஒருவர்தானா?-02

இலக்கியங்களில் ஓளவை என்னும் சொல் அன்னை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

தமிழ்க்கலைக்களஞ்சியத்தில்

"அம்மை என்பதன் திரிபாகிய அவ்வை என்ற சொல்லுடன் சிறப்புணர்த்தும் விகுதியாகிய ஆர் சேர்ந்து ஓளவையார் என்னும் சொல் பெண்களில் உயர்ந்தவரைக்குறிக்கின்றது."
என குறிப்பிடப்பட்டுள்ளது.

"அவ்வை மகளிவள்தான் அம்மணம் பட்டிலா
வையேயிற்று ஐயைக்கண்டாயோ தோழி" இது சிலப்பதிகாரத்தில் கூறபப்ட்டது.இதில் தாய் என்னும் பொருளில் அவ்வை என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.



மணிமேகலைக்காப்பியத்தில்
"தவ்வைய ராகிய தாரையும் வீரையும அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன வாய்வ தாக மானிட யாக்கையில் தீவினை அறுக்கும் "

இதில் தமக்கை என்னும் பொருளில் தவ்வை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஒளவையின் வரலாறுபற்றி துணைக்கதைகளுடன் பல கதைகள் உள்ளன.திருவள்ளுவர் கதையில் ஓளவையார் பற்றிய வரலாற்றைப்பார்ப்போம்.

பாண்டி நாட்டில் தமிழ்ச்சங்கப்புலவர்கள் தம் புலமைச்செருக்கால் கர்வமுற்றிருந்தார்கள்.சிவன் அவர்களின் அகந்தையை அடக்க நான் முகனை திருவள்ளுவராகவும்,திருமாலை இடைக்காடராகவும்,கலைமகளை ஓளவையாராகவும் உலகில் அவதரிக்கப்பணித்தார்.

முதல் பதிவு இங்கே கிளிக்

அகத்தியர் கடற்கன்னியை மணந்து பெருஞ்சாகரன் என்ற மகனைப்பெற்றார்.அவன் திருவாரூர் புலைச்சி என்பவளை மணந்து பகவன் என்னும் மகனைப்பெற்றெடுத்தார்கள்.

பிரம்ம குல தவமுனி அருண்மங்கை என்ற பெண்ணை திருமணம் செய்து பெண்மகவைப்பெற்றெடுத்தார்கள்.பின் அப்பிள்ளையை விட்டு தவஞ்செய்யச்சென்றுவிட்டார்.பின்னர் அப்பிள்ளையை உறையூர் சேரியில் வாழும் பெரும்பறையன் என்பவன் எடுத்துவளர்த்தான்.ஒரு நாள் திடீரென உறையூரில் மண்மாரி பொழிந்து ஊரே அழிய அப்பெண்பிள்ளை மட்டும் தப்பிக்கொண்டது.பின்னர் அப்பிள்ளையை  நிதியையன் என்பவன் எடுத்துவளர்த்தான்.
இன் நிலையில் அந்தணனாகிய பகவன் சத்திரத்தில் தங்கியிருக்க நிதியையனின் வளர்ப்புமகள் பகவனை நெருங்கினாள். நீ புலைச்சியா என கூறி சட்டுவத்தால் தலையில் இரத்தம் வரும்படி அடித்துத்துரத்தினான் பகவன்.
சில வருடங்களின் பின் மீண்டும் பகவன் அச்சத்திரத்திற்கு வரும்போது அச்சிறுமி பருவ வயதில் அழகான சிறுமியாக மாறியிருந்தாள்.உடனே பகவன் காதல்வயப்பட்டு அவளைத்திருமணம் செய்துகொண்டான்.திருமணமாகி 5 ஆம் நாள் மனைவி நீராடியபோது தலையில் உள்ள வடுவுக்கு காரணம் கேட்டான் பகவன்.அவள் நடந்ததைக்கூற அதிர்ச்சியடைந்த பகவன் ஆதியாள் (பழைய பெண்)என கூறி அவளை வெறுத்து ஒதுக்கினான்.இதனால் அவள் ஆதி என அழைக்கப்படலானாள்.ஆனால் அவள் விட்டு செல்லாது வலிந்து பின் தொடர்ந்தாள்.

இதனால் சேர்ந்துவாழ சில நிபந்தனைகளை வைத்தான் பகவன்.பிறக்கும் குழந்தைகள் அத்தனையையும் பிறக்கும் இடத்திலேயே விட்டுவிடவேண்டும் என்பதுதான் அன் நிபந்தனை.அதற்கு ஆதி சம்மதித்தாள்.தம்பதியருக்கு முதலாவது குழந்தையாக பிறந்தவர்தான் ஓளவையார்.ஆதி தன் குழந்தையை பிரிய மிகவும் வருந்தும்போது தன் தாய் தன்னை பிரிய வருந்துகிறாளே என்று தாயை சமாதானப்படுத்த குழந்தை ஒரு பாடல் பாடியது.

"இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னும்செத்துவிட்டானோ?முட்ட முட்ட 
பஞ்சமே ஆனாலும்,பாரம் அவனுக்கு அன்னாய்
நெஞ்சமே அஞ்சாதே நீ"

இவ்வாறு ஆதியும் பகவனும் யாத்திரை செல்லும் வழியில் ஒவ்வொரு பிள்ளைகளாக 6 பிள்ளைகளைப்பெற்றெடுத்தார்கள்.உப்பை,அதியமான்,உறுவை ,கபிலர்,வள்ளி,வள்ளுவர் இவர்கள்தான் அந்த 6 குழந்தைகள்.இவர்கள் ஒவ்வொருவரையும் தாய் ஆதி பிரிய வருந்தியபோது ஒவ்வொரு குழந்தையும் ஓளவையைப்போல் பிறந்தவுடன் தாய்க்கு ஆறுதல்கூறிப்பாடல் பாடின.என்று கூறுகின்றது திருவள்ளுவர்கதை.


ஆனால்  வாகீச முனிவரின் ஞானாமிர்தம் என்னும் பிற்கால நூலில் ஓளவையின் தந்தை யாளிதத்தன் என்னும் மறையோன் என்றும்,தாய் ஆதப்புலைச்சி என்றும் கூறப்பட்டுள்ளது.

"யாளி-கூவற் றூண்டு மாதப் புலைச்சி
காதற் காசனி யாகி மேதினி
யின்னிசை எழுவர்ப் பயந்தோ ளீண்டே"
யாளிதத்த முனிவன் தன்னால் வெட்டுண்ட கிணற்றிலே வீழ்த்தப்பட்ட அறிவில்லாப்பெண்ணை ஒரு பிராமணன் எடுத்து கொண்டுசென்று உத்தரபூமியிலே வளர்த்து இவனுக்கே பின்னர்கொடுக்க இவனுக்கு அவள் காதலித்த பார்ப்பனியாய் இன் நிலவுலகின் கண்ணே இனிய கீர்த்தி பெற்ற கபிலர் முதலிய பிள்ளைகளை ஈங்கு பெற்றாள்.

கபிலர் கபிலர் அகவலில் ஆதி என்னும் புலைச்சிக்கும் பகவன் என்னும் அந்தணனுக்குமிடையில் பிள்ளைகளாகத்தானும் ஏனைய அறுவரும் பிறந்ததாகக்குறிப்பிட்டுள்ளார்.


அருந்தவ மாமுனி யாம்பக வற்குக்
கருவூர்ப் பெரும்பதிக் கட்பெரும் புலைச்சி
ஆதி வயிற்றினி லன்றவ தரித்த
கான்முளை யாகிய கபிலனும் யானே
என்னுடன் பிறந்தவ ரெத்தனை பேரெனில்
ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்
------------------------------------
ஊற்றுக் காடெனும் ஊர்தனிற் றங்கியே
வண்ணா ரகத்தில் உப்பை வளர்ந்தனள்
காவிரிப்பூம் பட்டினத்திற் கள்விலைஞர் சேரியில்
சான்றா ரகந்தனில் உறவை வளர்ந்தனள்
நரப்புக் கருவியோர் நண்ணிடு சேரியில்
பாணரகத்தில் ஒளவை வளர்ந்தனள்

அபிதான சிந்தாமணியில் தரப்பட்டுள்ள ஒரு பாடலிலும் இதே கருத்தைக்காண முடிகின்றது.

கபிலர் அதிகமான் கார்க்குறவர் பாவை
முகிலனைய கூந்தல் முறுவை-நிகரிலா
வள்ளுவர் அவ்வை வயலூற்றுக் காட்டிலுப்பை
யெண்ணில் எழுவர் இவர்


உடன் பிறந்தவர்கள் என கூறபப்டுபவர்களுள் வள்ளுவர்,அதியமான்,கபிலர் போன்றவர்களே சங்க நூல்களில் வருவோர்.எனினும் இவர்கள் பிறந்த ஊர்,குடிகள் வேறுவேறானவை.
கபிலர் அந்தணர்,வள்ளுவர் வள்ளுவ குடி,அதியமான் சேரர் குடியில் பிறந்தவன்.இவற்றின் காரணமாக வள்ளுவர்,கபிலர் ஓளவையார்,அதியமான் என்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்பது புனைகதைஎன நம்பப்படுகின்றது.

ஒளவையைப்பற்றி மற்றொருவரலாறு
வேதமொழி என்ற பெரியவர் ஒருவர் முன்னாளில் வாழ்ந்தார் அவருக்கு போராளி என்றபெயருடைய புதல்வன் ஒருவன் இருந்தான்.அவன் 12 வயதை அடையும்போது அதே ஊரில் இழிகுலத்தில் ஒருவனுக்கு பெண்குழந்தை ஒன்றுபிறந்தது.அக்குழந்தையை தன் மகனுக்கு பின்னாளில் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று அப்பெரியவர் சிந்தித்தார்.தன் மகனிடம் அக்குழந்தையில் ஏதாவது அடையாளம் இருக்கின்றதா எனப்பார்த்துவா எனக்கூற அவன் பார்த்துவந்து தொடையில் கறுப்பி நிற மச்சம் இருப்பதாக வந்துகூறினான்.குழந்தை பிறந்த மாலை நேரத்தில் சிறிய விண்மீன் ஒன்று எரிந்தவண்ணம் வந்து விழுந்தது இதை ஊரார் தீய சகுனமாகக்கருதினர்.குழந்தை பிறந்திருப்பது ஊருக்கு நல்லதல்ல குழந்தையை கொன்றுவிடுமாறு தந்தைக்கு கட்டளையிட்டனர்.ஆனால் அவன் கொல்லாமல் ஒரு தெப்பத்தில் குழந்தையை காவேரி ஆற்றில் விட்டுவிட்டான்.குழந்தை ஆற்றில் வழிபட்டுக்கொண்டிருந்த பார்ப்பனன் கையில் சிக்கியது அவன் குழந்தைவரம் கிடைக்கப்பெறாத அவன் அக்குழந்தையை எடுத்து வளர்த்துவந்தான் சிலவருடங்களில் போராளி பார்ப்பனன் இல்லத்தில் சென்று தங்கினான் அப்போது போராளியின் நல்ல குணத்தைக்கண்ட பார்ப்பனன் தன் மகளை(வளர்ப்புமகளை) அவனுக்கே திருமணம் செய்துவைத்தார்.பின்னர் ஒரு நாள் குளிக்கும்போது மச்ச அடையாளத்தைப்பார்த்து இவள் ஆதியாள் என்று அறிந்து வீட்டை விட்டு ஓட அப்பெண்ணும் பின்னாலேயே ஓடினாள் பின்னர் அழுதுகொண்டு கணவன் சென்ற பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது அவ்வழியால் வந்த பார்ப்பனன் ஒருவன் அவளது நிலைகண்டு இரங்கி அவளை தன் மகள்களுடன் சேர்த்துவளர்த்துவந்தான் தான் மரணிக்கும் தறுவாயில் தன் சொத்துக்களில் ஒருபங்கை தன் வளர்ப்பு மகளுக்கு எழுதிவைத்துவிட்டு சென்றான்.அவள் அச்சொத்துக்களைக்கொண்டு காசியில் அன்னதான சத்திரம் ஒன்றை அமைத்து அதை நடத்திவந்தாள் அப்போது போராளி அங்குவந்து உணவு உண்டான் இருவருக்கும் தாம் யார் எனத்தெரிந்திருக்கவில்லை.ஆனால் அப்பெண் தன் வரலாற்றை அவனிடம் கூற அவள் தன் மனைவி என்பதை தெரிந்துகொண்டு அடுத்த நாள் சொல்லாமல் வெளியே செல்லமுற்படுகின்றான்..அய்யா என் கணவர் சொல்லாமல் விட்டுசென்றது போலவே நீங்களும் செல்கின்றீர்களே என்று கேட்க  நான்தான் உன் கணவன் என ஒத்துக்கொள்கின்றான் ஆனால்  நான் உன்னை ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் பிறந்த குழந்தைகளை பிறக்கும் இடங்களிலேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும் என்று கட்டளையிடுகின்றான். அப்பெண்ணுக்குப்பிறந்த முதல் குழந்தை ஓளவையார்.

தமிழ்க்கலைக்களஞ்சியத்தில் ஓளவையார் இருவர் என கூறப்பட்டுள்ளது.ஒருவர் சங்ககாலத்தவர் மற்றயவர் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்.ஆனால் பொதுவாக ஓளவையார் மூவர் என்றும் கூறப்படுகின்றது.மூன்று காலங்களில் ஓளவையார் வாழ்ந்தார் என்று கூறப்படுகின்றது.ஒருவர் சங்ககால ஓளவையார்,மற்றயவர் இடைக்கால ஓளவை,மற்றயவர் பிற்காலத்து ஓளவையார்.எது எப்படியோ ஒவ்வொன்றாக சங்ககாலத்தில் இருந்து பார்த்துவிடுவோம்.

சங்ககால ஓளவையார்...

இவர் கி.பி 2 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்தவர்நற்றிணையில் 7 பாடல்களும், குறுந்தொகையில் 15 பாடல்களும், அகநாநூற்றில் 4 பாடல்களும், புறநாநூற்றில் 33 பாடல்களுமாக ஓளவையாரின் 59 பாடல்கள் சங்க இலக்கியங்களுள் அடங்குகின்றன, .சங்க கால ஓளவையார் ஓர் விறலி எனக்கூறப்படுகின்றது.விறலி என்றால் பொருள்விளங்கும் வகையில் அபிநயத்துடன் ஆடிக்காட்டுபவள் என்று பொருள்.மை தீட்டிய கண்களுடன் அழகான அணிகலன்களையும் ஓளவை அணிந்திருந்தார் எனவும் கூறப்படுகின்றது.இந்த ஓளவையினால் பாடல்பெற்ற அரசர்கள் பாரி,வள்ளல்,வேந்தர், நாஞ்சில் வள்ளுவர் போன்றவர்கள்.இந்த ஓளவைதான் அதியமானிடம் அதாவது அதியமான் நெடுமான் அஞ்சியிடம் நீண்ட நாள் உயிர்வாழும் நெல்லிக்கனியைப்பெற்றவர்.
வேட்டைக்கு சென்ற அதியமான்  நீண்டகாலம் வாழவைக்கும் ஆற்றலைக்கொண்ட கரு நெல்லியை அதன் பயன் என்னவென்று கூறாது ஓளவையிடம் உண்ணக்கொடுத்தான்.உண்டபின்னர் இதைப்பற்றி அறிந்த ஓளவை அதியமானைப்புகழ்ந்து பாடும் பாடல் புறனானூறில் இருந்து...

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கலந்த கழல்தொடி தடக்கை
ஆர்கலி நறவின், அதியல் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

சங்ககால ஓளவையார் என்ன சமயம் என்பதிலும் குழப்பம் உள்ளது.காரணம் சங்க காலத்தில் சைவ,வைணவ,சமண சமயங்கள் இருந்தன.ஆனாலும் ஓளவையார் சைவ சமயம் என்பதற்கு மேலே ஓளவைபாடிய பாடலே ஒரு ஆதாரமாகக்கொள்ளப்படுகின்றது.

"நீல மணிமிடற்று ஒருவன்போல"

இதில்  நீல மணிமிடற்று  என்ற சொல் சிவனைக்குறிக்கின்றது.ஓளவை சைவராக இருப்பதற்கு இப்பாடல் ஆதாரம் அப்படி இல்லையானால் ஓளவையார் பிற சமயக்காழ்ப்புணர்ச்சி அற்றவர் என்பதற்கு இப்பாடல் ஆதாரம்.

அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றதும் இதே ஓளவைதான்.அங்கு தொண்டைமானை புகழ்வதுபோல் இகழ்ந்தார் என்பது வேறுகதை.

 இங்கே உள்ள ஆயுதங்கள் எல்லாம் மயில் பீலி அணிந்து, மாலை சூட்டி, நெய்பூசப்பட்டு காவல் நிறைந்த உன்னுடைய அரண்மனையிலே அழகாக இருக்கின்றன. ஆனால், இருந்தால் உணவுகொடுத்தும், இல்லையென்றால் இருப்பதைப் பகிர்ந்தும் உண்ணுகின்ற இயல்புடையவனும், ஏழைகளின் தலைவனுமாகிய எங்கள் மன்னன் நெடுமான் அஞ்சியின் வேல்களோ பகைவர்களைக் குத்தியதனால் நுனி மழுங்கிச் சிதைந்து கொல்லனின் உலைக்களத்திலேயல்லவா கிடக்கின்றன

இவ்வே பீலி அணிந்து மாலைசூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன் நகர் அவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம் கோமான் வைந்நுதி வேலே.

சங்ககால ஓளவையார் பாணர் மரபைச்சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது.

பாணர் குடியில் பிறந்தவர் என கூறப்படுவதற்கான காரணங்கள்..

பகை நாட்டு அரசன் ஒருவன் ஓளவையிடம் என்னோடு பொருந்தக்கூடிய அரசன் எவனாவது உன் நாட்டில் உளனோ?என்று கேட்டிருக்கின்றான்.அவன் ஓளவையை விறலி என்றுதான் விழித்திருக்கின்றான்.ஓளவை அதைப்பாடியுள்ளார்.

"இழையணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாணுதல் விறலி
பொருநரும் உளரேநும் அகன்  தலை நாட்டென
வினவலானாப் பொருபடை வேந்தே"

அறவை நெஞ்சத் தாயர் வளரும் என்ற புற நானூறுப்பாடலில்

ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர்,
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என்
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பல் நாள் அன்றியும்

என்னும் பாடலில் தனது தொழிலைக்குறிப்பிட்டுள்ளார்.

ஓளவை அதியமானிடம் பாடல்பாடி பரிசுபெறச்சென்றபோது அதியமான் பரிசில்கொடுக்காமல் காலம் தாழ்த்தினான்.பாடல் முடிந்ததும் ஓளவை சென்றுவிடுவாரே என்ற கலக்கம்தான் இதற்குகாரணம்.கால தாமதத்தால் கோபமடைந்த ஓளவை கீழ் வரும் பாடலை பாடினார்.

வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“

இப்பாடலில் "காவினெம் கலனே  சுருக்கினெம் கலப்பை" என்ற வரியைக்கவனிக்கவேண்டும்

ஆதலால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம்.
எங்கள் இசைக்கலங்கள் கொண்ட பைகளைக் கட்டிக்கொண்டோம்.

அத்துடன் ஓளவையை ஓளவைப்பாட்டி என்று அழைப்பது பொதுவான வழக்கம்.பாட்டி  என்பது பாணன் என்பதன் பெண்பாற் பெயர்,பாடினி,பாட்டி,விறலி என்பவை ஒரே பொருளை உடையவை.

ஓளவையார் பாணர் குலத்தவரல்ல என்ற கருத்தும் நிலவுகின்றது.அவ்வாறு வாதிடுவோர் சில விடயங்களை முன்வைக்கின்றார்கள்

அக்காலத்தில் புலவர்கள் தாம் எக்குலத்தில் பிறந்தவர்களானாலும் பாணர் குலத்தில் பிறந்தவர்களாக பாவனை செய்து யாழ் இசைத்து பாடல் பாடி பரிசு பெறும் வழக்கத்தையுடையவர்கள்.எனவே பாணர் என்ற கருத்துடைய ஓளவையின் பாடல்களைக்கொண்டு ஓளவையார் ஒர் பாணர் என்ற முடிவுக்கு வரமுடியாது.

வேளாளர் எனக்கருதப்படும் அரிசில்கிழார் போகனைப்பாடிய பாடல் ஒன்றில் சீறியாழ் செவ்வழி பண்ணி நின்வன்புல நன்னாடு பாட என பாடியுள்ளார்.

உண்மையில் ஓளவையின் குலம் என்னவென்பது ஒரு முக்கிய பிரச்சனை இல்லை.பாண் குடி இனத்தவராக இருந்தாலும் ஓளவை மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்தமையால்தான் பெண்ணாக இருந்தும் அதியமானுக்காக  தொண்டைமானிடம் தூது சென்றுள்ளார்.அத்துடன் அதியமானின் மகன் பொகுட்டெழினியின் அவைக்களப்புல்வராக இருந்து அதியமானின் மரணத்தின் பின் அரசியல் நுணுக்கங்களை அருகில் இருந்தே சொல்லிக்கொடுத்தவர் ஓளவையார்தான்.


புற நானூறில் மாங்குடிக்கிழார் என்பவர் அக்காலத்தில் சிறந்துவிளங்கிய மதிக்கப்பட்ட குடிகளாக சில குடிகளைக்குறிப்பிட்டுள்ளார்.துடியன்,பாணன்,பறையன்,கடம்பன்.இவற்றுள் பாணன் என்பதும் மதிக்கப்பட்ட குடியாகத்தான் இருந்துவந்தது.

இதில் ஒரு விடயத்தைக்கவனிக்கலாம் பறையன் என்ற குடியும் மதிக்கப்பட்ட குடியாகத்தான் இருந்துவந்தது.அன்றைய காலத்தில் குடி என்ற சொல்லே இருந்தது சாதி என்ற பெயர் இல்லை அத்துடன் செய்யும் தொழிலை வேறுபடுத்தவே குடிகள் பயன்படுத்தப்பட்டனவே அன்றி இன்றையகாலங்களில் பின்பற்றப்படும் மிருகத்தனமான வேற்றுமைகள் தீட்டுக்கள் போன்றவை அன்று இல்லை.பறை என்பது தமிழர் ஆதி வாத்தியங்களுள் முதன்மையானதாகும். அதை தயாரிப்போரும் வாசிப்போரும் ஆதிக்குடிகளாக மதிப்புடையவர்களாக இருந்திருக்கிறார்கள். பிராமண ஆதிக்கம் வந்து, மாட்டை உண்பது, கொல்லுவது எல்லாம் விலக்கப்பட்டதாக ஆக, அதோடு சம்பந்தப்பட்ட அந்த  குடியும் தாழ்குடியானதானது.

கபிலரின் வருணாசிரம எதிர்ப்புப்பாடல்களைக்கொண்டு சங்க கால சமூகம் வருணப்பாகுபாட்டைக்கொண்டிருந்தது என கூறமுடியாது என கூறப்பட்டாலும் புற நானூறில் ஒரு பாடல் உள்ளது

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்,
கீழ்ப்பா லொருவன் கற்பின்,
மேற்பா லொருவனும் அவன்கட் படுமே.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான் என்ற குறள் பிறப்புவழிப்பாகுபாட்டை ஏற்கமறுத்து சோசலிஸத்தைப்போதிக்கின்றது.இவற்றைக்கொண்டு சங்ககாலத்திலும் ஏற்ற தாழ்வுகள் சிறிதளவு இருந்தது என அறியலாம்.

முருகதாசர் தான் இயற்றிய புலவர் புராணத்தில் காரைக்கால் அம்மையார் சிவனிடத்தில் பேயுருவை வேண்டிப்பெற்றதுபோல் ஓளவை தன் இளமைக்காலத்திலேயே முதுமையை வேண்டிப்பெற்றுக்கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில் திருக்கோவலூர் அரசனாக இருந்த மலையமான் திருமுடிக்காரி என்பவன் மீது போர் தொடுத்து வெற்றிகொண்டான் அதியமான் போரில் தோற்ற திருமுடிக்காரி பெருஞ்சேரலிரும்பறையை நாடி உதவி கேட்க அவனும் இணங்கினான் இருவரும் அதியமான் மீது போர்தொடுத்தார்கள்.அப்போரில் பெருஞ்சேரலிரும்பறையின் கூரியவேல் அதியமான் நெஞ்சை துளையிட்டு அப்பால் சென்றது அதியமான் வீரமரணமடைந்தான்.அதியமான் போரில் மாணடதும் உயிர் நீத்த அதியமானின் சடங்குகள் நடந்தபோது ஓளவை உருகிப்பாடியபாடல்
இல்லா கியரோ, காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே?

பாடல் இறுதியில் இனி காலை மாலை இல்லையாகுக இனி என் வாழ் நாளும் இல்லாது மறைந்து ஒழிவதாக என மிகவும் மனம் வருந்திப்பாடினார்.தான் இறக்கவேண்டும் என்று பாடிய ஓளவை ஏன் இறக்கவில்லை.பாரி இறந்ததும் அவன் மீது கொண்ட அன்பினால் கபிலர் உயிர் நீத்தார் ஆனால் ஓளவை ஏன் இவ்வாறு செய்யவில்லை.காரணம் அதியமானின் மகன் பொகுட்டெழினிக்கு அரசவைப்புலவராகவும் அரசியல் சகடங்களை கற்பிப்பவாராகவும் இருக்கவேண்டிய கட்டாயம் இருந்தது ஓளவைக்கு அத்துடன் கணவன் இறந்தால் ஒரு பெண் உடன்கட்டையேறும் வழக்கம் இருந்ததே தவிர வேறோர் ஆடவன் இறந்ததும் தன்னை மாய்க்கும் வழக்கம் புறம்பானதாக கருதப்பட்டது.

வள்ளுவர் இயற்றிய திருக்குறளுக்கு சங்ககாலப்புலவர் இடைக்காடர் 

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத்தறித்த குறள்"

என்று புகழுரைவழங்கக்கேட்ட ஓளவை அதனினும் சிறப்பாக புகழுரை வழங்குவதற்காக பாடியதுதான்

"அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகட்டிக்
குறுகத்தறித்த குறள்"

கம்பருக்கும் ஓளவையாருக்குமிடையில் பல விவாதங்கள் நடந்துள்ளன.

ஒரு முறை ஓளவை வீதியால் நடந்துசெல்லும்போது களைப்படைந்து ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார்.அது சிலம்பி என்ற தாசியின் வீடு அவள் ஒரு பாட்டி தனது வீட்டின் திண்ணையில் களைத்து அமர்ந்திருப்பதைக்கண்டு தான் குடிக்க வைத்திருந்த கூழை ஓளவைக்குக்கொடுத்தாள்.அப்போது ஓளவை சுவரில் ஒரு பாடலின் ஒருவரி எழுதியிருப்பதை அவதானித்தார்.

“தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே மண்ணாவதுஞ் சோழ மண்டலமே” இது என்னவென்று கேட்க சோழ மன்னனின் அவைக்கழப்புலவர் கம்பரின் வாயால் புகழப்பட்டவர்கள் சீரோடும் சிறப்போடும் வாழுகின்றார்கள் என்பதைக்கேட்டு.கம்பரிடம் ஒரு பாட்டைக்கேட்டிருந்தேன் அதற்காக என்னிடமிருந்த நான் கஸ்ரப்பட்டு சேர்த்துவைத்திருந்த 500 பொற்காசுகளையும் கொடுத்துவிட்டேன்.ஆனால் அவர் ஒருவரியை மட்டும் எழுதிவிட்டு ஒரு பாடலுக்கு 1000 பொற்காசுகள் என்று கூறிசென்றுவிட்டார் சேர்த்துவைத்திருந்த பணம் முழுவதையும் இழந்ததால் நான் வறுமையில் வாடுகின்றேன் என்றும் கூறி அழுதாள் சிலம்பி.

அதைக் கேட்ட ஔவையார்  வரிகளின் கீழே
“பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு” என எழுதினார்.ஓளவை அவளைப்பாடியதால் அவள் புகழ்பரவி விரைவிலேயே செல்வச்சீமாட்டியானாள் சிலம்பி.

இந்த விடயம் கம்பரின் காதுக்கு எட்டியது தான் 500 பொற்காசுகளுக்காக ஏழையாக்கியவளை ஓளவை செல்வசீமாட்டியாக்கிவிட்டாரே என்று கோபப்பட்டார்.இதன் காரணமாக ஓளவை அவைக்கு வரும்போது டீ என்ற சொல் வருமாறு சிலேடையாக ஒரு வசனத்தைக்கூறினார்.

ஒரு கால், நாலிலைப் பந்தலடீ(ஆரைக்கீரையைக்குறித்துத்தான் கம்பர் இவ்வாறுகேட்டார் கீரை ஒரு காலில் நிற்கும் 4 இலைகளும் அதற்கு உண்டு ஆனால் "அடி" என்னும் இழி சொல்லால் அல்லவா ஓளவையைக்கேட்டார்)

உடனே ஓளவை ஒரு பாடல் பாடினார்....(இப்பாடலை எனது தமிழ் ஆசான் படித்துக்காட்ட நான் கெக்கே பிக்கே என்று சிரித்துவாங்கிக்கட்டிக்கொண்டேன்)

“எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க் கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாயது”
தமிழில் “அ” அன்பது எண் 8ஐக் குறிக்கும் “வ” 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் “அவ” என வரும்.
எட்டேகால் லட்சணமே என்றால் “அவ லட்சணமே” எனப் பொருள்படும். எமனேறும் பரி எருமை எமனேறும் பரியே என்றால் “எருமையே” எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் “மூதேவியின் வாகனமே” என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் “குட்டிச் சுவரே” என்று பொருள் படப்பாடியுள்ளார்.

ஒருமுறை கம்பரை நோக்கி சோழன் உலக இன்பங்களில் சிறந்தது எதுஎனக்கேட்டான். அதற்குக்கம்பர்
"கங்கைநீர் அதனின் மிக்க கடவுள் நீர் எங்குமில்லை
வெங்கதிர் ஒளியே யன்றி வேறோர் ஒளியுமில்லை
எங்கணும் தாயைப்போல இனியதோர் உறவுமில்லை
மங்கையர் சுகமே யன்றி மறுசுகம் இல்லை மன்னா! என்று பாடினார். இதனைக்கேட்ட ஓளவையார் பாட்டுமுழுவதும் குற்றமுடையது எனக்கூறினார். எவ்வாறு என வினவினான் சோழன்.

விண்ணின் மழையே அல்லால் வேறொரு நதியுமில்லை
கண்ணினின் ஓளியே யல்லால் காணுமோர் ஓளியுமில்லை
எண்ணிடிற் பொருளைப்போலே இனியதோர் உறவுமில்லை
உண்டிற் சுவையேயல்லால் ஒரு சுகம் இல்லை மன்னா எனப்பாடினார் ஓளவை.

பிறிதொரு முறை சோழன் ஓளவையின் வாய்மொழியை கிளறிமகிழவிரும்பியவனாய் கம்பரைப்போல் பெரிய நூலகளைப்பாடத்தக்க புலவர்கள் இருக்கின்றார்களா எனக்கேட்டான்.
அதற்கு ஓளவை

வான்குருவியின் கூடு வல்லாக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரித்தால்-யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வெண்டாங்காண்
எல்லார்க்கு மொவ்வொன் றெளிது.

சித்திரமுங்க் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்- நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்புந் தயையும்
கொடையும் பிறவிக்குணம்.

விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல் நிறைய மோதிரம் வேண்டும்-அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
 நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே- நாணாமற்
பேச்சுப்பேச சொன்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி

என்ற வெண்பாக்கள் மூலம் பதிலளித்தார்.

ஒரு நாள் சோழன் அவையிலே கம்பர் முதலியோர் கூடியிருக்கும்போது ஓளவையார் அனைவரையும் பார்த்து..
"கல்வி யுடையீர் கருங்கா நகத்திடையே
 நெல்லி யிலையுதிர்ந்து நிற்பதெவன்? என்று கேட்டார்.
உடனே கம்பர் 
வெல்லா வழக்கை விலைவாங்கி வெல்விக்கும்
வல்லாளன் சுற்றம்போல் மாண்டு
என்று பதில் அளித்தார். உடனே ஓளவை நான் அவையாரைப்பார்த்துத்தானே கேள்வியைக்கேட்டேன் நீவீர் ஏன் விடையளித்து என் பாட்டை முடித்தீர்? இதுபோன்றுதான் நான் நீவிர் சிலம்பியின் வீட்டு சுவரில் எழுதிவைத்த பாட்டையும் முடித்தேன்.இத்தகைய செயல்கள் அறிவு நிரம்பிய அனைவருக்கும் இயல்பேயாகும் நீவீர் என்னிடத்தில் பகைமை பாராட்டியது நும் அறிவுடமைக்கு அழகாகுமோ? என்று கேட்டார்.இச்சம்பவத்திற்குப்பின்னர் இருவரும் நண்பர்களாயினர்.

தொடரும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

மியாவுக்கு கல்யாணம்